Tuesday, April 24, 2018

இளங்கோவடிகள் குறிப்பிட்ட சோமகுண்டம்,சூரியகுண்டம்.

பூம்புகாரில் கடலொடு காவிரி கலக்கும் சங்கமத்துறையில் நெய்தலங் கானல் என்ற சோலையில் காமவேள் கோட்டத்துடன் அமைந்தனவாக இளங்கோவடிகளால் குறிக்கப்பட்ட சோமகுண்டம்,சூரியகுண்டம் என்ற இருக்குளங்களில் நீராடினர்க்கு இம்மை மறுமை இன்பங்களை அளிக்கும் பெருமை வாய்ந்த இவ்விருக்குளங்களும் இதனை அடுத்துள்ள காமவேள் கோட்டத்துடன் கடலால் கொள்ளப்பட்டு மறையவே,அக்காலத்தில் உள்ள புகார் நகர மக்கள் இவற்றை நினைவு கூர்ந்து நீராடிப் பயன் பெறும் கருத்துடன் இம்மை மறுமைக்குரிய இவ்விருக் குளங்களுடன் அம்மையாகிய வீடு பேற்றினை யளிக்கவல்ல அக்கினி தீர்த்தம் என்ற மற்றொரு தீர்த்தத்தையும் சேர்த்து திருவெண்காட்டுத் திருக்கோயில் முக்குளங்களாக அமைத்தனர் என சதாசிவப்பண்டாரத்தார் குறிப்பிடுகிறார்.இவ்வுலக மக்கள் மேற்குறித்த மூன்று குளங்களிலும் நீராடி இறைவனை வழிப்பட்டு இம்மை மறுமையாகிய இருமையின்பங்களுடன் ஈறிலாவின்பமாகிய வீடு பேற்றினை யும் ஒருங்கு பெறுதற்குரிய நல்வாய்ப்பினை வழங்கியுள்ளார்கள் எனப் பண்டாரத்தார் கருதுகிறார். "கடலொடு காவிரி சென்றலைக்கு முன்றில் மடலவிழ் நெய்தலங் கானல் தடமுள சோமகுண்டஞ் சூரியகுண்டத் துறை மூழ்கிக் காமவேள் கோட்டந் தோழுதார் கணவரொடு தாமின் புறுவ ருலகத்துத் தையலார் போகஞ்செய் பூமியினும் போய்ப் பிறப்பார் " எனத் தேவந்தி கண்ணகிக்குக் கூறுவதாக அமைந்த இவ்வடிகளில் இளங்கோவடிகள் குறித்த இவ்விரு தீர்த்தங்களின் சிறப்பையும் நன்குணரலாம்.கடலொடு காவிரி சென்று சேரும் இடத்திலமைந்த இத்தீர்த்தங்களை நன்னெடும் பெருந் தீர்த்தம் என சேக்கிழார் போற்றுகிறார். இவை கடலாற்க்கொள்ளப்பட்ட நிலையில் திருவெண்காட்டிலுள்ள முக்குளங்களில் மூழ்கி இறைவனை வழிப்பட்டோர் அடையும் பயன்களை உலக மக்களுக்கு அறிவுறுத்துவன "பேயடையா பிரிவெய்தும் பிள்ளையினோ டுள்ளநினை வாயினவே வரம்பெறுவர் ஐயுறவேண்டா வொன்றும் வேயனதோ ளுமைபங்கன் வெண்டகாட்டு முக்குளநீர்த் தோய்வினை யாரவர் தம்மைத் தோயாவாந்தீவினையே" எனத் திருஞானசம்பந்தர் பாடலால் இந்த மூன்று தீர்த்தங்களின் சிறப்பை அறியலாம். இரா.விக்ரமன்,சிதம்பரம்.

Wednesday, April 18, 2018

திருஞானசம்பந்தர் அவதார இல்லம்.

நாளும் இன்னிசையால் தமிழ் பரப்பும் ஞானசம்பந்தன் பிறந்த இல்லம்.இந்த இல்லம் ஸ்ரீ காஞ்சி காமக்கோடி பீடம் மடத்திடம் உள்ளது. வேத சிவாகம திருமுறை பாடசாலையாக திகழ்கின்றது.கி.பி. ஏழாம் நூற்றாண்டில் சிவபாத இருதயர்க்கும் பகவதியாருக்கும் பிறந்த ஆளுடையப் பிள்ளை தந்தையோடு நீராட சீர்காழி பிரம்ம புரீஸ்வரர் கோயில் குளக்கரைக்கு சென்ற ஆளுடையப் பிள்ளை அங்கு தேவி பார்வதியின் கையால் ஞானப்பால் உண்டு ஞானசம்பந்தன் எனப் பெயர் பெற்றார். 'தோடுடைய செவியன்'என தனது முதல் பதிகத்தைப் பாடினார்.பின்பு பல தலங்களைப் பாடி பல அதிசயங்களை நிகழ்த்தி இறுதியாக  நல்லூர்  பெருமணம் எனும் ஆச்சாள் புரத்தில் திருமணக் கோலத்தில் தன் தாய்,தந்தை சுற்றத்தாருடன் சிவஜோதியில் கலந்தார். (இவற்றை திருஞானசம்பந்தர் வரலாற்றில் விரிவாக காணலாம்.)
இரா.விக்ரமன்,சிதம்பரம்.





Tuesday, April 17, 2018

மகேந்திர வர்ம பல்லவன் கட்டிய குணபரவீச்சரம்

திருநாவுக்கரசரால் சைவனாக மாறிய மகேந்திரவர்மன் கடலூர் பாடலிபுத்திரம் எனும் திருப்பாதிரிபுலியூரில் இருந்த சமணப்பள்ளிகளை இடித்து திருவதிகையில் தன் விருதுப் பெயரான குணபரன் என்னும் பெயரில் குணபரஈச்சுரம் என்னும் சிவன் கோவிலை எடுப்பித்தான்.சேக்கிழாரின் பெரியப்புராணம் மூலம் தான் மகேந்திர வர்மன் கட்டிய கோவிலை அறிய முடிகிறது."வீடறியாச் சமணர்மொழி மெய்யுணர்ந்த பொய்யென்று காடவனும் திருவதிகை நகரின்கண் கண்ணுதற்குப் பாடலிபுத்திரத்தில் அமணரர் பள்ளியொடு பாழிகளும் கூடஇடித்துக் கொணர்ந்து குணபரவீச்சர மெடுத்தான்"என பெரியபுராணத்தில் வரும் பாடலால் அறியலாம். இக்கோயில் பாண்டியர் காலத்தில் செங்கல் கோயிலாக தான் புதுப்பிக்கப்பட்டது.பின்பு அவையும் இடித்து தற்போது புதிப்பிக்கப்பட்டுள்ளது.இக்கோயிலை சுற்றி சமண சிற்பங்கள் இருந்துள்ளன.தற்போது அவை இங்கு இல்லை. இரா.விக்ரமன்,சிதம்பரம்.







சோழ குலமாணிக்கம்

சோழகுலமாணிக்கம் என செம்பியன் மாதேவியார் அழைக்கப்டுகிறார்.இராஜராஜ சோழன் இப்பேரரசியை குலமாணிக்கமாகிய நம்பிராட்டியார் செம்பியன் மாதேவியார் என ப...