Tuesday, April 24, 2018

இளங்கோவடிகள் குறிப்பிட்ட சோமகுண்டம்,சூரியகுண்டம்.

பூம்புகாரில் கடலொடு காவிரி கலக்கும் சங்கமத்துறையில் நெய்தலங் கானல் என்ற சோலையில் காமவேள் கோட்டத்துடன் அமைந்தனவாக இளங்கோவடிகளால் குறிக்கப்பட்ட சோமகுண்டம்,சூரியகுண்டம் என்ற இருக்குளங்களில் நீராடினர்க்கு இம்மை மறுமை இன்பங்களை அளிக்கும் பெருமை வாய்ந்த இவ்விருக்குளங்களும் இதனை அடுத்துள்ள காமவேள் கோட்டத்துடன் கடலால் கொள்ளப்பட்டு மறையவே,அக்காலத்தில் உள்ள புகார் நகர மக்கள் இவற்றை நினைவு கூர்ந்து நீராடிப் பயன் பெறும் கருத்துடன் இம்மை மறுமைக்குரிய இவ்விருக் குளங்களுடன் அம்மையாகிய வீடு பேற்றினை யளிக்கவல்ல அக்கினி தீர்த்தம் என்ற மற்றொரு தீர்த்தத்தையும் சேர்த்து திருவெண்காட்டுத் திருக்கோயில் முக்குளங்களாக அமைத்தனர் என சதாசிவப்பண்டாரத்தார் குறிப்பிடுகிறார்.இவ்வுலக மக்கள் மேற்குறித்த மூன்று குளங்களிலும் நீராடி இறைவனை வழிப்பட்டு இம்மை மறுமையாகிய இருமையின்பங்களுடன் ஈறிலாவின்பமாகிய வீடு பேற்றினை யும் ஒருங்கு பெறுதற்குரிய நல்வாய்ப்பினை வழங்கியுள்ளார்கள் எனப் பண்டாரத்தார் கருதுகிறார். "கடலொடு காவிரி சென்றலைக்கு முன்றில் மடலவிழ் நெய்தலங் கானல் தடமுள சோமகுண்டஞ் சூரியகுண்டத் துறை மூழ்கிக் காமவேள் கோட்டந் தோழுதார் கணவரொடு தாமின் புறுவ ருலகத்துத் தையலார் போகஞ்செய் பூமியினும் போய்ப் பிறப்பார் " எனத் தேவந்தி கண்ணகிக்குக் கூறுவதாக அமைந்த இவ்வடிகளில் இளங்கோவடிகள் குறித்த இவ்விரு தீர்த்தங்களின் சிறப்பையும் நன்குணரலாம்.கடலொடு காவிரி சென்று சேரும் இடத்திலமைந்த இத்தீர்த்தங்களை நன்னெடும் பெருந் தீர்த்தம் என சேக்கிழார் போற்றுகிறார். இவை கடலாற்க்கொள்ளப்பட்ட நிலையில் திருவெண்காட்டிலுள்ள முக்குளங்களில் மூழ்கி இறைவனை வழிப்பட்டோர் அடையும் பயன்களை உலக மக்களுக்கு அறிவுறுத்துவன "பேயடையா பிரிவெய்தும் பிள்ளையினோ டுள்ளநினை வாயினவே வரம்பெறுவர் ஐயுறவேண்டா வொன்றும் வேயனதோ ளுமைபங்கன் வெண்டகாட்டு முக்குளநீர்த் தோய்வினை யாரவர் தம்மைத் தோயாவாந்தீவினையே" எனத் திருஞானசம்பந்தர் பாடலால் இந்த மூன்று தீர்த்தங்களின் சிறப்பை அறியலாம். இரா.விக்ரமன்,சிதம்பரம்.

No comments:

Post a Comment

சோழ குலமாணிக்கம்

சோழகுலமாணிக்கம் என செம்பியன் மாதேவியார் அழைக்கப்டுகிறார்.இராஜராஜ சோழன் இப்பேரரசியை குலமாணிக்கமாகிய நம்பிராட்டியார் செம்பியன் மாதேவியார் என ப...