Sunday, May 7, 2023

சோழ குலமாணிக்கம்

சோழகுலமாணிக்கம் என செம்பியன் மாதேவியார் அழைக்கப்டுகிறார்.இராஜராஜ சோழன் இப்பேரரசியை குலமாணிக்கமாகிய நம்பிராட்டியார் செம்பியன் மாதேவியார் என பாராட்டியுள்ளன்.இவர் பெயரால் குலமாணிக்க நல்லூர்,குலமாணிக்க வாய்க்கால்,சோழகுலமாணிக்க சதுர்வேதிமங்கலம் என அழைக்கப்பட்டது.

Saturday, April 29, 2023

தளவாய்புரம் செப்பேடுகள்

பாண்டியன் பராந்தக வீரநாரயணன் தளவாய்புரம் செப்பேடு என அழைக்கப்படுகிறது.இது திருநெல்வேலி அருகே தளவாய்புரம் என்ற கிராமத்தில் கிடைத்த செப்பேடாகும்.ஏழு செப்பேடுகளை கொண்ட சாசனம் இது பராந்தக வீரநாரயணன் ஆறாம் ஆட்சி ஆண்டில் எழுதப்பட்டது.இதன் முத்திரையில் புலி இரண்டு மீன்கள் கீழே வில்லும் இவற்றை சுற்றி கிரந்த எழுத்தில் சுலோகம் எழுதப்பட்டுள்ளது.இந்த செப்பேட்டின் எழுத்துக்கள் தமிழிலும் சமஸ்கிருதத்திலும் எழுதப்பட்டுள்ளது.தமிழ் பகுதி வட்டெழுத்திலும் சமஸ்கிருத பகுதி கிரந்த எழுத்தில் எழுதப்பட்டுள்ளது.ஆராய்ச்சி பேரறிஞர் தி.வை.சதாசிவ பண்டாரத்தார் இச்செப்பேட்டை படியெடுத்து புகைபடமும் எடுத்துள்ளார்.இச்சானத்தை அறிஞர் மயிலை சீனி வேங்கடசாமி தமது சாசன செய்யுள் மஞ்சரி நூலின் மூலம் முதன் முதலில் வெளியிட்டார். இரா.விக்ரமன்,சிதம்பரம்.

Monday, April 17, 2023

சித்திரை விஷீ தமிழ் புத்தாண்டு

இரண்டாம் பராந்தகனாகிய சுந்தர சோழ ஆட்சியில் 12 ஆம் ஆண்டில் ஆற்றூர் துஞ்சினதேவர் அரிஞ்சய சோழன் தேவி ஆதித்தன் கோதை பிராட்டியார் திருவனந்தீசுரத்து பெருமானுக்கு சித்திரை விஷீ க்கு 108 கலச நீர் கொண்டு அபிஷேகம் செய்ய நிலம் அளித்துள்ளனர்.இந்த கல்வெட்டில் அரசிகளின் பெயர்களாக வருகின்றன.ஆதித்தன் கோதை பிராட்டியார்,திரிபுவனமாதேவி, சோழமாதேவி,வீமன் குந்தவை ஆகும் இரா.விக்ரமன்,சிதம்பரம்.

Friday, December 30, 2022

நக்கன் கொற்றி எடுத்த திருப்பரங்குன்றம் குடைவரை கோயில்

பாண்டியன் பராந்தகன் நெடுஞ்சடையான் படைத்தளபதி சாத்தான் கணபதி இக்கோயில் சிவபெருமானுக்கு திருப்பணி செய்து குளத்தையும் சீர் செய்தான்.இவன் மனைவி நக்கன் கொற்றி என்பவள் துர்க்கைக்கும்,சேஷ்டா தேவிக்கும் கோயில் எடுத்தாள்.மூத்த தேவி தனது மகன்,மகளுடன் அமர்ந்து இருக்கிறாள்.மற்றொரு கோயில் துர்க்கை கோயில் இவை பெரிய கோயில் இந்த தேவி வலது கை அபயமுத்திரையும் இடது கை துடை மீதும் மேல் இரண்டு கை பாசம்,அங்குசமுடனும் வாலக்காலை மடித்து இடக்காலை கீழே ஊன்றி தாமரை பீடத்தில் அமர்ந்துள்ளாள்.கீழே இரண்டு சிங்கமும் தேவியை சுற்றி பாலசாரர்,வேதவிசயர் முனிவர்களும் இருபுறம் புல்லாங்குழல் ஊதுவர் யாழை வாசிப்பவர் மற்றும் நந்தி.தேவியின் வலபுறம் உள்ள மனித உருவம் கையில் வாளும் கேடயத்துடன் உள்ளது கேடயத்தில் மீன் சின்னம் பொறிக்கப்பட்டுள்ளது இது பாண்டிய மன்னன் என்கின்றனர்.இந்த உருவம் படைதளபதி சாத்தன் கணபதியாக கூட இருக்கலாம். இக்குழுவில் 21சிற்பங்கள் உள்ளன.இச்சிற்பம் அப்போது பெண்கள் உயர்த்தி போற்றும் விதமாக பெண்களுக்கு முக்கியத்துவம் வாய்ந்த சிற்பமாக கருதப்படுகிறது.தற்போது இந்த சிற்பம் அன்னபூரணி,இராஜராஜேஸ்வரி என்றும் அழைக்கபடுகிறது. இரா.விக்ரமன்,சிதம்பரம்.

Friday, December 23, 2022

அமாரவதி பெளத்த தூபி திருப்பணி செய்த தமிழர்கள்

அமராவதிபெளத்தத் தூபி. அமராவதி பெளத்தத் தூபி அசோக காலத்திலிருந்து கி.மு 200 கி.பி.200 வரையில் உள்ள காலக்கட்டத்தில் படிபடியாக வளர்ச்சி அடைந்தது.இந்த விகாரைக்கு மன்னர்கள்,மக்கள்,புத்த பிச்சுகளால் படிப்படியாக திருப்பணி செய்யப்பட்டது.கி.பி.640இல் இந்தியா வந்த யூவாங் சுவாங் இந்த விகாரைக்கு சென்று வழிபட்டு அபிதம்மாபிகடம் படித்தார்.14 ஆம் நூற்றாண்டில் இந்த விகாரை பழுது பார்த்ததாக இலங்கை கல்வெட்டு குறிப்பிடுகிறது.பின்பு முற்றிலும் அழிந்த விகாரையின் கற்பலகை சிற்பங்கள் பலவற்றை ஆங்கிலேயர் 17 ஆம் நூற்றாண்டில் கண்டறிந்தனர்.இந்த பாகங்கள் சென்னை,டெல்லி,கல்கத்தா,லண்டன் போன்ற பல அருங்காட்சியகங்களில் உள்ளன. கி.மு. மூன்றாம் நூற்றாண்டிலே (அதாவது கடைச் சங்க காலத்திலேயே) தமிழ் நாட்டிலிருந்து தமிழ் வாணிகர் (சாத்துக் கூட்டத்தினர்) கலிங்க தேசத்துக்குச் சென்று வாணிகம் புரிந்ததையும், அவர்கள் நாளடைவில் அங்குச் செல்வாக்குப் பெற்றுக் கலிங்க நாட்டின் ஆட்சிக்கு ஆபத்தாக விளங்கினார்கள் என்பதையும், அந்த ஆபத்தை அறிந்த அக்காலத்தில் கலிங்க நாட்டை அரசாண்ட காரவேலன் என்னும் அரசன் அத்தமிழ் வாணிகச் சாத்தை அழித்து ஒடுக்கினான் என்பதையும் கலிங்க நாட்டிலுள்ள ஹத்திகும்பா குகைச் சாசனம் கூறுகின்றது. இந்த ஹத்திகும்பா குகைச் சாசனத்தை எழுதியவன் காரவேலன் என்னும் அரசனே. இவன் கி.மு. இரண்டாம் நூற்றாண்டின் பிற்பகுதியில் கலிங்க தேசத்தையரசாண்டான். இவன் தன்னுடைய பதினோராவது ஆட்சி ஆண்டில் (கி.மு. 165 இல்) தமிழ்நாட்டு வாணிகச் சாத்தை அழித்தான். அந்தத் தமிழ் வாணிகச் சாத்தினர், அவர்கள் அழிக்கப்படுவதற்கு முன்பு 113 ஆண்டுகளாகக் கலிங்க நாட்டில் தங்கி வாணிகம் புரிந்து வந்தனர். எனவே, (கி.மு. 165 + 113) - 278) கி.மு. மூன்றாம் நூற்றாண்டிலேயே அத்தமிழ் வாணிகச் சாத்துக் குழு, கலிங்க நாட்டிற் சென்று வாணிகம் செய்யத் தொடங்கிற்று என்பது தெரிகின்றது. நூற்றுப்பதின் மூன்று ஆண்டுகளாகக் கலிங்க நாட்டிலேயே தங்கி வாணிகம் புரிந்த தமிழர்கள், தங்களுடன் மனைவிமக்களையும் அழைத்துக் கொண்டு போய் இருப்பார்களல்லவா? மனைவி மக்களுடன் வாழாமலா அவர்கள் பரம்பரை பரம்பரையாக அத்தனை ஆண்டுக்காலம் அங்கே தங்யிருப்பார்கள்? எனவே, தரைவழியாக அயல்நாடுகளுக்குச் சென்றபோது, கடைச் சங்ககாலத் தமிழன் தன்னுடன் மனைவியையும் அழைத்துச் சென்றான் என்பது இதனால் பெறப்படுகின்றது. இதற்கு இன்னொரு சான்றும் கிடைத்திருக்கின்றது. ஆந்திர தேசத்திலே பண்டைக் காலத்தில் புகழ்பெற்றிருந்த அமராவதி நகரத்திலே தமிழ் வணிகர்கள் இருந்தார்கள். அவர்கள் குடும்பத்தோடு அங்குத் தங்கி இருந்தார்கள். அவர்களில் இருவர், பேர்பெற்ற அமராவதி பௌத்த ஸ்தூபிக்குத் திருப்பணிக் கைங்கரியம் செய்திருக்கிறார்கள். இச்செய்தி அங்குக் கிடைத்த சாசன எழுத்துக் கல் எழுத்துக்களினால் தெரிகின்றது. அமராவதி பௌத்த ஸ்தூபிக் கட்டடத்திலிருந்து கிடைத்த தூண்கல் ஒன்றில், தமிழன் கண்ணனும் அவன் தம்பி இளங்கண்ணனும் அவன் தங்கை நாகை (நாகம்மாள்) என்பவளும் சேர்ந்து அந்தத் தூண் திருப்பணியைச் செய்ததாக எழுதப்பட்டுள்ளது. இந்தச் சாசனக் கல்லின் அளவு 2 அடி 8 அங்குல அகலமும், 3 அடி 6 அங்குல உயரமும்உள்ளது. இதில் எழுதப்பட்டுள்ள எழுத்து பழைய பிராமி எழுத்தாகவும் பாஷை பாலி பாஷையாகவும் உள்ளன. இந்தச் சாசனத்தின் வாசகம் இது. “தமிளா கணஸ பாதுணம் சுலகணஸ நாகாய ச(தான)ன மஹாசே தியபாத மூலே உதம்பதோ.1” `தமிழக் கண்ணனும் அவன் தம்பி இளங்கண்ணனும் தங்கை நாகையும் இந்த மகா சைத்தியத்திற்கு அமைத்த உதம்பதக்கல்’ என்பது இச் சாசனத்தின் பொருள். இத் தமிழன், சகோதர சகோதரிகளுடனும் மனைவி மக்களுடனும் தரை வழியாக அயல்நாடு சென்று வாழ்ந்து வந்த செய்தி பெறப்படுவது காண்க. உதம்பதம் என்பது தூண்கல் என்று பொருள்படும். இதில் கூறப்படுகிற கண்ணனும் அவன் தம்பி இளங்கண்ணனும் தமிழ் நாட்டிலிருந்து சென்று அமராவதி நகரத்தில் தங்கியவர்கள் என்பது தமிழ்க் கண்ணன் என்பதிலிருந்து தெரிகின்றது. கடைச் சங்ககாலத்தில் அண்ணன் தம்பியர் ஒரே பெயருடன்வழங்கப்பட்டது போலவே - (சான்றாக, குமணன்-இளங்குமணன்,பெருஞ்சேரலிரும்பொறை- இளஞ்சேரiரும்பொறை, தத்தன் - இளந்தத்தன், விச்சிக்கோ -இளவிச்சிக்கோ, வெளிமான் - இளவெளிமான் முதலியன) - இவர்களும் கண்ணன் -இளங்கண்ணன்என்றுகூறப்பட்டிருப்பது நோக்குக. (சுலண என்பது சுல்லகண்ணன் அதாவது இளங்கண்ணன் என்பது பொருள்.) பாலி மொழியில்பிராமி எழுத்தில் எழுதப்பட்ட இந்தச்சாசனம் அமராவதி பௌத்தச் சயித்தியம்(பௌத்த ஸ்தூபம்) கட்டப்பட்ட காலத்தில் எழுதப்பட்டது. அமராவதி பௌத்தச் சயித்தியம் கட்டப்பட்ட காலம் கி.மு. 200 முதல் கி.பி. 200 வரையில் உள்ளகாலம் என்று கூறுகிறார்கள். அதாவது நேர் கடைச் சங்ககாலம் எனவே கடைச் சங்ககாலத்தில் எழுதப்பட்ட சாசனம் இது. பௌத்த மதத்தாரின் “தெய்வ பாஷை”யாக அக்காலத்தில் பாலி பாஷை இருந்தபடியால் இச்சாசனம் பாலிமொழியில் எழுதப்பட்டிருக்கிறது. இந்தச் சாசனம் ,தமிழ் நாட்டிலிருந்து தரை வழியாக அயல் நாட்டுக்குக் குடும்பத்தோடு சென்று வாணிகம் செய்தனர் தமிழர் என்பதை உள்ளங்கை நெல்லிக்கனிபோல விளக்குகின்றது.சங்க காலத்தில் தமிழர் தரை வழியாகப் பெண்டிரையும் அழைத்துக் கொண்டு அயல்நாடுகளுக்குச் சென்றனர் என்னும் செய்தியை, கலிங்கநாட்டுக் காரவேல அரசரின் ஹத்திகும்பா சாசனமும் அமராவதி பௌத்த சயித்தியக் கல்வெட்டெழுத்துச் சாசனமும் சற்றும் ஐயத்துக்கிடமில்லாமல் உறுதிப்படுத்துகின்றன. எனவே, `முந்நீர் வழக்கம் மகடூவோ டில்லை’ என்னும் தொல்காப்பியர் சூத்திரத்துக்கு உரை எழுதிய இளம்பூரண அடிகள், “காலில் (தரை வழியாகஅயல்நாடுகளுக்குச செல்வது) பிரிவு தலைமகளை உடன் கொண்டு பிரியவும் பெறும’ என்று கூறியுள்ளது சரியானதென்பதும், நச்சினார்க்கினியர் கூறும் பொருள் சரியானதென்று என்பதும் இந்தப் பழம்பொருள் சாசனச் சான்றுகளினால் அறியப்படுகின்றன. (விக்ரமன் ராமன்) சங்ககால வரலாற்றில் சில செய்திகள் மயிலை சீனி வேங்கடசாமி. Archaeology survey of southern India Buddhists stupas amaravati. Ashoka:search for India'

Sunday, October 23, 2022

திருப்புறம்பயம் பள்ளிப்படை கோயில் உண்மை வரலாறு

தமிழில் முதன்முதலில் பிற்கால சோழர் சரித்திரம் நூலை எழுதிய தி.வை.சதாசிவ பண்டாரத்தார் அவர்கள் இந்த திருப்புறம்பயத்தில் பிறந்தவர் ஆவார்.இந்த பள்ளிப்படை கோயிலை கண்டறிந்தவர். திருப்புறம்பியம் போர் திருப்புறம்பய கொள்ளிடகரையில் பல்லவன் அபராசிதவர்மனுக்கும், பாண்டியன் இரண்டாம் வரகுணனுக்கும் கி.பி.885இல் நடந்தது. இதில் ஆதித்த சோழன், கங்க மன்னன் முதலாம் பிருதிவிபதி ஆகியோர் பல்லவருடன் சேர்ந்து பாண்டியனை எதிர்த்து போரிட்டனர் பாண்டியன் வரகுண வர்மன் தோற்றான். கங்க மன்னன் பிருதிவிபதி இப்போரில் இறந்தான். அபராசிதவர்ம பல்லவனும் ஆதித்த சோழனும் வெற்றி பெற்றனர்.ஆதித்த சோழனுக்கு சோழநாடு முழுவதையும் ஆளும் உரிமை கிடைத்தது.இப்போர் இங்கு நடைபெற்றது என இதற்கு ஆதரமாக சதாசிவ பண்டாரத்தார் இப்போரில் இறந்த கங்க மன்னன் முதலாம் பிருதிவிபதியின் நடுகற்கோயிலையும் உதிரப்பட்டி என்ற நிலப்பகுதியையும் கண்டறிந்து கூறினார். மேலும் கச்சியாண்டவன் என்ற நடுகற்கோயிலும் போர் நிகழ்ந்த இடம் என்று கருதப்படும் பறந்தலை என்னும் அவ்வூரில் காணப்படுகிறது என்கிறார். கச்சியாண்டவன் கோயில் என்பது போரில் இறந்த பல்லவ மன்னன் ஒருவன் நடுகற் கோயில் என அவ்விடத்தையும் சதாசிவ பண்டாரத்தார் கண்டறிந்து கூறினார். இவர் எழுதிய பிற்கால சோழர் சரித்திரம் நூலை அடிப்படையாகக் கொண்டு கல்கி அவர்கள் பொன்னியின் செல்வன் நாவலை எழுதியுள்ளார் அவற்றில் இந்த பள்ளிப்படை கோயில் பற்றி அந்நாவலில் குறிப்பிட்டுள்ளார்.

Wednesday, October 5, 2022

கம்போச நாட்டு மன்னன் காட்சியாக காட்டின கல்லு

முதல் குலோத்துங்க சோழன் தங்கையார் இராஜராஜன் குந்தையார் குந்தவை ஆழ்வார் என்பார், தில்லைச் சிற்றம்பலப் பெருமானுக்கு தண்ணீர் அமுது செய்தருளுதற்கென ஐம்பதின் கழஞ்சு நிறையுள்ள பொன்வட்டிலைத் தில்லைப் பெருங்கோயிலுக்கு வழங்கியுள்ளார். மேலும் அக்கல்வெட்டில் "ஸ்ரீ இராசேந்திர சோழ தேவர்க்குக் காம்போஜராஜன் காட்சியாகக் காட்டின கல்லு இது - உடையார் இராசேந்திர சோழ தேவர் திருவாய் மொழிந்தருளி உடையார் திருச்சிற்றம்பலமுடையார் கோயிலில் முன் வைத்தது - இந்தக் கல்லு திருவெதிரம்பலத்துத் திருக்கல் சரத்தில் திருமுன் பத்திக்கு மேலைப் பத்தியிலே வைத்தது" முதல் குலோத்துங்க சோழனுக்கு கம்போஜ நாட்டு மன்னன் தனக்கு காட்சி பொருளாக காட்டின கல்லொன்றை பெற்று வந்து தில்லை சிற்றம்பலத்தை சார்ந்துள்ள திருவெதிரம்பலத்தில் வைத்தான் என சிதம்பரம் கல்வெட்டு குறிப்பிடுகிறது.கம்போச நாட்டு தென்பகுதியை ஆண்ட ஹர்ஷவர்மனே நம் குலோத்துங்க சோழனுக்கு நணன்பனாக இருக்க வேண்டும் குலோத்துங்க சோழன் ஆட்சி காலத்தில் கடாரம் தேசம் போல கம்போச நாடும் சோழ இராச்சியத்தோடு நட்புரிமை கொண்டு வணிகத் தொடர்புடையதாக இருந்திருக்க வேண்டும் என சதாசிவ பண்டாரத்தார் குறிப்பிடுகிறார். எதிர்அம்பலம் என்பது சிற்றம்பலத்தை ஒற்றியுற்ற கனகசபையாக இருக்க வேண்டும். இரா.விக்ரமன்,சிதம்பரம். பிற்கால சோழர் சரித்திரம் தி.வை.சதாசிவ பண்டாரத்தார்.

சோழ குலமாணிக்கம்

சோழகுலமாணிக்கம் என செம்பியன் மாதேவியார் அழைக்கப்டுகிறார்.இராஜராஜ சோழன் இப்பேரரசியை குலமாணிக்கமாகிய நம்பிராட்டியார் செம்பியன் மாதேவியார் என ப...